1 கர்த்தாவே, நியாயத்திற்கான என் ஜெபத்தைக் கேளும். எனது ஜெபப் பாடலுக்குச் செவிகொடுத்தருளும். எனது நேர்மையான ஜெபத்தைக் கேளும்.

2 என்னைப் பற்றிய சரியான முடிவு எடுப்பீர். உம்மால் உண்மையைக் காணமுடியும்.

3 நீர் என் இருதயத்தின் ஆழத்தைப் பார்த்தீர். இரவு முழுவதும் என்னோடிருந்தீர். என் இருதயத்தை ஆராய்ந்து என்னில் ஒரு குற்றத்தையும் நீர் காணவில்லை. நான் எந்தத் தீய செயல்களையும் திட்டமிடவில்லை.

4 உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கு என்னால் இயன்றமட்டும் முயன்றேன்.

5 உமது வழிமுறைகளை பின்பற்றினேன். உமது வாழ்க்கை வழிகளிலிருந்து என் பாதங்கள் விலகவில்லை.

6 தேவனே, உம்மைக் கூப்பிட்டபோதெல்லாம், எனக்குப் பதிலளித்தீர். எனவே, இப்போதும் எனக்குச் செவிகொடும்.

7 தேவனே, உம்மை நம்புகிற உமது வலது பக்கத்திலிருக்கும் ஜனங்களுக்கு உதவுகிறீர். உம்மைப் பின்பற்றுகிறவனின் இந்த ஜெபத்திற்குச் செவிகொடும்.

8 கண்ணின் மணியைப்போல என்னைப் பாதுகாத்துக்கொள்ளும். உமது சிறகுகளின் நிழலில் என்னை மறைத்துக்கொள்ளும்.

9 கர்த்தாவே, என்னை அழிக்க நினைக்கிற தீயோரிடமிருந்து என்னை மீட்டருளும். என்னைத் தாக்க முயல்கிற ஜனங்களிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.

10 தங்களைப் பற்றிப் பெருமைபாராட்டுகிற அத்தீயோர் தேவனுக்குச் செவிசாய்க்க முடியாதபடி பெருமையுடையோராய் இருக்கிறார்கள்.

11 அந்த ஜனங்கள் என்னைத் துரத்தினார்கள். இப்போது அவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள். என்னைத் தாக்குவதற்குத் தயாராக இருக்கிறார்கள்.

12 பிற விலங்குகளைக் கொன்று சாப்பிடக் காத்திருக்கும் சிங்கத்தைப்போன்று அத்தீயோர் காணப்படுகிறார்கள். தாக்கக் காத்திருக்கும் சிங்கத்தைப்போல் மறைந்திருக்கிறார்கள்.

13 கர்த்தாவே, எழுந்து பகைவரிடம் சென்று, அவர்கள் சரணடையச் செய்யும். உமது வாளால் அத்தீயோரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.

14 கர்த்தாவே, உயிருள்ளோர் வாழும் தேசத்திலிருந்து அத்தீயோரை உமது வல்லமையால் அப்புறப்படுத்தும். கர்த்தாவே, பலர் உம்மிடம் உதவிக்காக வருவார்கள். இவ்வாழ்க்கையில் அதிகம் பலனில்லை. அவர்களுக்கு அதிக உணவளியும். வேண்டுவனவற்றை அவர்கள் பிள்ளைகளுக்குக் கொடும். அவர்களின் பிள்ளைகளுக்கும் மிகுந்திருக்கும்படியாக அப்பிள்ளைகளுக்குத் திருப்தியாய் உணவளியும்.

15 நான் நீதிக்காக ஜெபிக்கிறேன். கர்த்தாவே, உமது முகத்தைக் காண்பேன். கர்த்தாவே, உம்மைப் பார்ப்பதால் முழுமையான திருப்திகொள்வேன்.

Psalm 17 ERV IRV TRV