1 தேவனே, என்னிடம் இரக்கமாயிரும். என் ஆத்மா உம்மை நம்புவதால் என்னிடம் இரக்கமாயிரும். துன்பங்கள் என்னைக் கடந்து செல்கையில், பாதுகாப்பிற்காக நான் உம்மிடம் வந்துள்ளேன்.

2 மிக உன்னதமான தேவனிடம் உதவி வேண்டி நான் ஜெபிக்கிறேன். தேவன் என்னை முற்றிலும் கண்காணித்துக்கொள்கிறார்.

3 பரலோகத்திலிருந்து அவர் எனக்கு உதவி செய்து, என்னைக் காப்பாற்றுகிறார். எனக்குத் தொல்லை தரும் ஜனங்களை தோல்வி காணச் செய்கிறார். தேவன் தனது உண்மையான அன்பை எனக்குக் காட்டுகிறார்.

4 என் வாழ்க்கை ஆபத்தில் சிக்கியிருக்கிறது. என் பகைவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் மனிதரை உண்ணும் சிங்கங்களைப் போலிருக்கிறார்கள். அவர்கள் பற்கள் ஈட்டிகளைப் போலவும். அம்புகளைப் போலவும் கூர்மையானவை. அவர்கள் நாவுகள் வாளைப் போன்று கூரியவை.

5 தேவனே, நீர் வானங்களின்மேல் மிக உயரத்தில் இருக்கிறீர். உமது மகிமை பூமியை மூடிக் கொள்கிறது.

6 அவர்கள் எனக்கு கண்ணி வைத்துப் பிடிக்க விரும்புகின்றனர். நான் விழுவதற்காக அவர்கள் ஒரு ஆழமான குழியை வெட்டினார்கள். ஆனால் தாங்களே அக்கண்ணியில் விழுந்தார்கள்.

7 ஆனால் தேவன் என்னைப் பத்திரமாக காப்பார். அவர் என்னைத் துணிவுடனிருக்கச் செய்கிறார். நான் அவரைத் துதித்துப் பாடுவேன்.

8 என் ஆத்துமாவே, எழுந்திரு. வீணையே, சுரமண்டலமே இசைக்கத் தொடங்குங்கள். அதிகாலையை விழித்தெழச் செய்வோமாக!

9 என் ஆண்டவரே, ஒவ்வொருவரிடமும் உம்மைத் துதிப்பேன். ஒவ்வொரு தேசத்திலும் உம்மைப்பற்றியத் துதிப்பாடல்களைப் பாடுவேன்.

10 உமது உண்மையான அன்பு வானத்தின் உயர்ந்த மேகங்களைக் காட்டிலும் உயர்ந்தது.

11 தேவன் வானங்களுக்கு மேலாக எழுந்தருளியிருக்கிறார். அவரது மகிமை பூமியை மூடிக் கொள்கிறது.