1 தீர் மன்னன் ஈராம் தாவீதிடம் தூதர்களையும் அவருக்கு ஓர் அரண்மணை கட்ட கேதுரு மரங்களையும் மற்றும் கொத்தனார் தச்சரையும் அனுப்பிவைத்தார்.

2 இதனால், ஆண்டவர் இஸ்ரயேலின் மேல் தம்மை அரசராக உறுதிப்படுத்தினார் என்றும் அவருடைய மக்களாகிய இஸ்ரயேலின் பொருட்டுத் தமது அரசை மிகவும் சிறந்தோங்கச் செய்தார் என்றும் தாவீது அறிந்து கொண்டார்.⒫

3 எருசலேமிலும் தாவீது பல பெண்களை மணம் செய்து கொண்டார். அவருக்கு இன்னும் புதல்வர், புதல்வியர் பலர் பிறந்தனர்.

4 அவருக்கு எருசலேமில் பிறந்த பிள்ளைகளின் பெயர்கள்; சம்முவா, சோபாபு, நாத்தான், சாலமோன்,

5 இப்கார், எலிசுவா, எல்பலேற்று,

6 நோகாசு, நெபேகு, யாப்பியா,

7 எலிசாமா, பெகலியாதா, எலிப்பலேற்று.

8 தாவீது இஸ்ரயேல் முழுவதற்கும் அரசராகத் திருப்பொழிவு செய்யப்பட்டதைப் பெலிஸ்தியர் கேள்விப்பட்டபோது, அவர்கள் அனைவரும் தாவீதைத் தேடிப்பிடிக்கும்படி வந்தனர். தாவீது அதை அறிந்து அவர்களை எதிர்க்கச் சென்றார்.

9 பெலிஸ்தியர் வந்து இரபாயிம் பள்ளத்தாக்கில் கொள்ளையிட்டனர்.⒫

10 தாவீது கடவுளிடம், “நான் பெலிஸ்தியரை எதிர்த்துச் செல்லலாமா? அவர்களை என்கையில் ஒப்புவிப்பீரா?” என்று கேட்டார். ஆண்டவர் அவருக்குப் பதிலுரையாக “போ, அவர்களை உன் கையில் ஒப்புவிப்பேன்” என்றார்.

11 தாவீதும் அவர் ஆள்களும் பாகால் பெராசிமுக்கு வந்து, அவர்களை அங்கே முறியடித்தார். “வெள்ளம் அடித்துக் கொண்டு போவதுபோலக் கடவுள் என் எதிரிகளை என் கைவன்மையால் அழித்துவிட்டார்” என்றார் தாவீது. அதன் காரணமாக, அவ்விடத்திற்குப் ‘பாகால் பெராசிம்’* என்று பெயரிட்டனர்.⒫

12 பெலிஸ்தியர் தங்கள் தெய்வச் சிலைகளை அங்கு விட்டுச் சென்றிருந்தனர்; தாவீது கட்டளையிட, அவற்றைத் தீக்கிரையாக்கினர்.

13 பெலிஸ்தியர் மீண்டும் அந்தப் பள்ளத்தாக்கில் கொள்ளையிட்டனர்.

14 தாவீது திரும்பவும் கடவுளின் ஆலோசனையைக் கேட்டார். கடவுள், “நீ அவர்களை எதிர்த்து நேராகச் செல்லாமல் அவர்களைச் சுற்றிவளைத்து பிசின் மரத்தோப்புக்கு வா.

15 அம்மரங்களின் உச்சியில் படைசெல்வதன் இரைச்சல் கேட்கும் போது, உடனே போருக்குப் புறப்படு; ஏனெனில், பெலிஸ்தியரின் படையை முறியடிக்கக் கடவுள் உனக்கு முன் செல்கிறார்” என்றார்.

16 கடவுள் கட்டளையிட்டபடியே தாவீது செய்தார். கிபயோன் தொடங்கிக் கெசேர் வரை பெலிஸ்தியரின் படையை முறியடித்தனர்.

17 தாவீதின் புகழ் எல்லா நாடுகளிலும் பரவியது; அனைத்து மக்களினங்களும் அவருக்கு அஞ்சி நடுங்கும்படி ஆண்டவர் செய்தார்.